"மனிதர்களானாலும் சரி, விலங்குகளானாலும் சரி, அவர்கள் சந்தோஷமாக இருக்க வேண்டுமானால் போட்டிகளும் போராட்டங்களும் அவசியம்' என்று டெஸ்மாண்ட் மாரிஸ் என்ற மானிடவியலார் கூறுகிறார். வன விலங்குகள் உணவுக்காகவும், காதலுக்காகவும், உயிர் பிழைப்பதற்காகவும் மற்ற விலங்குகளுடன் இடைவிடாது போட்டியிட்டுக் கொண்டும் போராடிக் கொண்டுமிருக்கின்றன. ஆதி மனிதர்களும் அப்படித் தானிருந்தார்கள். நவீன யுகத்தில் வன்முறையற்ற போட்டிகளுக்கும் போராட்டங்களுக்கும்கூட தேவை குறைந்து கொண்டே போகிறது. அதன் காரணமாகவே மனித சந்தோஷ அளவுக் குறியீட்டு எண் படிப்படியாகக் குறைந்து கொண்டே வருவதாக வியன்னாப் பல்கலைக்கழகத்தின் உளவியல் ஆய்வர் குழு ஒன்று தெரிவிக்கிறது.
பல ஆண்டுகளாக, தன் அலுவலகத்தில் பலவிதமான சவால்களையும் போட்டிகளையும் போராட்டங்களையும் சந்தித்துக் கொண்டிருந்தபோது இருந்த உற்சாகமும், உத்வேகமும், விறுவிறுப்பும், சுவாரசியமும் ஓய்வு பெற்றபின் மறைந்து போகின்றன. ஓய்வு பெற்றபின் பலருக்கு உடல்நலம் விரைவாகக் குலைகிறது. ஒரு சிலர் மரணமும் அடைகிறார்கள். புத்திசாலிகள் ஓய்வு பெற்றபின் தமக்கேற்ற போட்டிகளையும், போராட்டங்களையும் உருவாக்கிக் கொண்டு மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.
நாய்களும் பூனைகளும் தம் வால்களைத் துரத்தியவாறு சுற்றிச் சுற்றிச் சுழலும். அதற்குக் காரணம் அலுப்புத்தான். அவற்றுக்கு வேட்டையாட வேண்டிய அவசியமில்லாமலே உணவு கிடைத்து விடுகிறது. எனவே அவை தமது வால்களை வேட்டையிலக்குகளாகக் கற்பனை செய்து கொண்டு துரத்திப் பிடிக்க முயலுகின்றன. அது ஒரு தூண்டலாக அமைத்து ஊக்கமுண்டாக்குகிறது.
தற்காலத்தில் நகரங்களிலும் ஊர்களிலும் மனிதர்களுக்குப் பாதுகாப்பான சூழல்கள் உள்ளன. நவீன எந்திரங்கள் மனித உழைப்பைத் தேவையில்லாமல் செய்து விட்டன. இப்போதெல்லாம் யாராவது ஓய்ச்சல் ஒழிவின்றி உழைத்துக் கொண்டிருக்கிறேன் என்று சொன்னால் அவர் வேண்டுமென்றே ஐந்து நிமிடங்களில் செய்து முடிக்க வேண்டிய வேலையை அரை மணி நேரத்துக்கு இழுத்தடிக்கிறார் என்றுதான் பொருள். அல்லது அவசியமேயில்லாத வேலைகளைச் செய்து கொண்டிருப்பார். நாயும் பூனையும் தம் வாலைத் துரத்துவதைப் போல அவர் செயற்கையாக ஒரு தூண்டலை உண்டாக்கிக் கொள்கிறார். அவர் செய்வதை விடக் குறைந்த அளவில் அவர் உழைத்தாலும் அவரால் உயிர் வாழ முடியும். ஆனால் அதில் சுவாரசியமிருக்காது.
ஆதி மனிதன் கட்டாயமாக உழைத்தே ஆக வேண்டியிருந்தது. ஆனாலும் அவன் தான் செய்யும் வேலையின் தன்மையை மாற்றிக் கொண்டேயிருந்ததால் அவனுக்கு அலுப்பு ஏற்படவில்லை. ஆனால் இன்று நவீன எந்திரங்களின் ஆதிக்கத்தில் தொழிலாளிகளின் புதுப்புனைவுத் திறன்கள் மழுக்கப்பட்டு விட்டன. கன்வேயர் பெல்ட்டில் வரிசையாக வருகிற கார்களின் கதவுகளின் ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஒரு திருகாணியை மட்டுமே பொருத்திக் கொண்டு தமது பணிக்காலம் முழுவதையும் கழிக்கிற தொழிலாளிகள் உள்ளனர். அவர்களுடைய மூளை அந்த ஒரு குறிப்பிட்ட பணிக்காக மட்டுமே புரோக்ராம் செய்யப்பட்டதாக மாறியிருக்கும். அவ்வாறானவர்கள் ஓய்வு நேரங்களில் அடிதடிகள் நிறைந்த சினிமாக்கள், குத்துச் சண்டைகள் போன்ற விறுவிறுப்பான விஷயங்களைப் பார்த்துத் தமது உபரி ஆற்றலை செலவழிப்பார்கள்.
சில பெண்கள் வழக்கமான அடுக்களைப் பணிகளை முடித்த பின்னர் புதுவிதமான சிற்றுண்டிகளைச் செய்து பார்ப்பதன் மூலம் தமது படைப்புத் திறன்களுக்குச் சவால் விட்டுப் பார்க்கிறார்கள். வீட்டு வேலைகளுக்குப் பணியாட்களை வைத்துக் கொள்ளும் வசதி பெற்ற பெண்கள் கலைப் பயிற்சிகளிலும் சமூக சேவைகளிலும் முனைகிறார்கள். தன்னால் முடியும் என்று தமக்குத் தாமே சவால் விட்டுக் கொண்டு வெற்றி பெறுவதற்கான ஒரு வகையான போராட்டமாகவே அது அமையும். இது போன்ற தூண்டல் தேவைகளுக்கு வடிகால் அமைத்துக் கொள்ளாத பெண்கள் தொலைக்காட்சித் தொடர்களையும் சினிமாக்களையும் பார்த்து அவற்றில் வரும் கதாநாயகிகளுக்காக அழுது பொழுதைக் கழிக்கிறார்கள். சவால்களோ போராட்டங்களோ இல்லாமல் இவ்வாறு கற்பனை உலகில் மனநிறைவு காணும் பெண்களில் பலர் சிடுமூஞ்சிகளாகவும் மனப்பிறழ்வு அடைந்தவர்களாகவும் மாறிவிட வாய்ப்புகள் உண்டு.
சுய உதவிக் குழுக்களில் சேர்ந்து கொண்டு சிறு தொழில்களில் ஈடுபட்டு பணம் சம்பாதிக்கும் எளிய இல்லத்தரசிகள் முதல் பெரும் தொழில் நிறுவனங்களில் உயர்நிலை நிர்வாகிகளாக வலம் வரும் பெண்மணிகள்வரை எல்லாரும் வெற்றி பெற்ற போராளிகள்தான். அவர்களுடைய முகங்களிலேயே ஆளுமையும் பெருமிதமும் மிளிரக் காணலாம். அவர்களுக்கு மனரீதியாகவோ உடல் ரீதியாகவோ நோய்க்குறிகள் அரிதாகவே ஏற்படுகின்றன.
ஒரு சிறு குழந்தை முதன்முதலாக எழுந்து நிற்பதிலும், தள்ளாடித் தள்ளாடி இரண்டு அடி எடுத்து வைப்பதிலும் வெற்றி பெறும்போது அதன் முகத்தில் தோன்றும் வெற்றிக் களிப்பைக் கவனித்திருக்கிறீர்களா? தனது போராட்டத்தில் வெற்றி பெற்றதால் ஏற்படும் சந்தோஷம் குழந்தையை மேலும் திறமையுடன் நடக்கவும் அடுத்து ஓடவும் உந்துகிறது.
போராட்டம் என்பது ஆயுதம் ஏந்தி ரத்தம் சிந்துவதைக் குறிக்கவில்லை. ஓர் ஊசியில் நூலைக் கோர்ப்பதுகூட ஒரு போராட்டம்தான். அதில் வெற்றி பெறும்போது மனதில் லேசாகத் துளிர்க்கும் மகிழ்ச்சியைப் பலரும் கவனித்திருக்க மாட்டீர்கள். பெரிய கோவிலையும் தாஜ்மஹாலையும் கட்டி முடித்த சிற்பிகள், சக்கரத்தைக் கண்டுபிடித்த ஆதி மனிதன், சூப்பர் கம்ப்யூட்டர்களை உருவாக்கிய விஞ்ஞானிகள் என எல்லாரும் தம் போராட்டங்களில் வெற்றி பெற்றவர்களே. வயிற்றுப் பிழைப்புக்காக மட்டுமே உழைத்து வந்த மனிதர்களை ஆத்ம திருப்திக்காக உழைக்க வைத்த பெருமை இந்தப் போராட்டங்களுக்கு உண்டு.
உடலுக்கும் மனதுக்கும் போதுமான வேலை தருகிற அளவுக்குத் தூண்டல்களும் உந்துதல்களும் இல்லாதபோது அலுப்பு உண்டாகிறது. இதற்கு மாறாக, அளவுக்கு மீறிய தூண்டல்களிருந்தாலும் மனிதர் உள்பட எல்லா விலங்குகளும் முதலில் அவற்றிலிருந்து விலகிப் போக முயலும். புதிதாக ஒரு நாய்க்குட்டி ஒரு தெருவில் நுழையும்போது பழைய நாய்களின் விரட்டல், சிறுவர்களின் கல்வீச்சு, கார் மற்றும் லாரிகளின் இரைச்சல் ஆகியவற்றால் மிரண்டு போய் ஏதாவது ஒரு சாக்கடைக்குள் போய்ப் பதுங்கிக் கொள்ளும். காட்டிலிருந்து பிடித்து வரப்பட்ட ஒரு விலங்கை விலங்குக் காட்சி சாலையில் அடைத்தால் புதிய கூண்டு, புதிய சூழ்நிலை, புதிய ஓசைகள் போன்றவற்றால் அது அதீதமாகக் கிளர்ச்சி அடையுமானால் அது தன் கூண்டின் இருண்ட மூலையில் போயச் சுருண்டு கொள்ளும். மனிதர்கள்கூட உடல்நலம் குன்றியிருக்கும்போது சந்தடிகளும் சத்தங்களுமற்ற தனியறையில் முடங்கிவிட முயலுகிறார்கள்.
அலுவலகங்களில் பெரிய பொறுப்பிலிருப்பவர்களுக்கு நாலா திசைகளிலிருந்தும் பல தூண்டல்களும் உந்துதல்களும் வந்து கொண்டேயிருக்கும். தலைமையகத்திலிருந்து வரும் உத்தரவுகள், குறிப்புகள், நினைவூட்டல்கள் எனப் பலவிதமான கோப்புகளைக் கையாள வேண்டியிருக்கும். பிரச்னைகளும் சிக்கல்களும் புதிர்களும் தீர்வுக்காக வந்து குவியும். பகல் முழுவதும் உழைத்தாலும் பாதி வேலைதான் முடிந்திருக்கும். மறுநாள் காலையில் புதிதாகக் கூடுதல் சவால்களை காத்திருக்கும், இந்த நிலையில் பலரும் முடங்கி விடுவார்கள்.
இந்தப் போராட்டங்களால் உடலும் மனதும் பாதிக்கப்படாமலிக்க, "கனவு காணுங்கள்' என ஸ்வீடன் நாட்டு உளவியல் ஆய்வர் ஒருவர் கூறுகிறார். இரவில் நாம் உறங்கும்போது நமது அகமனம் மூளையில் குவிந்திருக்கும் தகவல்களை ஆய்ந்து அவசியமானவற்றை நினைவுப் பகுதிகளில் அடுக்கி, தேவையற்ற குப்பைகளை வெளியேற்றி விடுகிறது. இதன் மூலம் மறுநாள் காலையில் புதிதாக வரவிருக்கிற தூண்டல்களுக்கு இடம் ஒதுக்கப்படுகிறது. இந்தச் செயல்பாட்டின்போது நமது அகமனத் திரையில் கனவுகள் உண்டாகின்றன. உறக்கத்தின் முதன்மையான நோக்கம் இப்படிக் கனவு காண்பதுதானே தவிர உடலுக்கு ஓய்வளிப்பது ஒரு துணைப் பயன் மட்டுமே.
பிற்பகலில் ஓரிரு மணி நேரம் உறங்கினாலும் கனவு கண்டு மூளையைச் சுத்தப்படுத்திக் கொள்ள முடியும். இரவில் அல்லது பகலில் உறங்கத் தொடங்கும்போது கண்களை மூடிக் கொண்டால் தெரிகிற கரிய பரப்பில் ஓர் அமைதியான காட்சியை வரவழைத்துக் கொண்டு அதில் முழுக் கவனத்தையும் செலுத்திக் கொண்டேயிருந்தால் அந்தக் காட்சி கனவாக மாறித் தொடரும். நாம் அறிந்தும் அறியாமலும் தூங்குகிற நேரம் முழுவதும் கனவுகள் உண்டாகிக் கொண்டேயிருக்கின்றன. அதன்மூலம் ஒரு சுறுசுறுப்பான வேலைக்காரி வீட்டைப் பெருக்கித் துடைத்துச் சுத்தம் செய்வதைப்போல அகமனம் மூளையைச் சுத்தப்படுத்தி மறுநாள் காலையில் புதுப்பொலிவுடனும் உற்சாகத்துடன் விழித்தெழ வைக்கிறது.
இவ்வாறு கனவு கண்டு மூளையையும் மனதையும் அவ்வப்போது சுத்தம் செய்து சுமைகளைக் குறைத்துக் கொள்ள முடியாதவர்கள், பலவிதமான உடல் மற்றும் மனக் கோளாறுகளினால் பீடிக்கப்படுகிறார்கள். எப்போதோ அடிபட்ட இடத்தில் திடீர் என்று வலி தோன்றும். எக்சீமா, சோரியாசிஸ் போன்ற தோல் வியாதிகள் வரும். பல் வலிக்கும். தலை வலி ஏற்படும். இவையெல்லாம் எச்சரிக்கைகள் தானே தவிர நோய்க்குறிகள் அல்ல. நமது பழக்க வழக்கங்களைச் சரியாக மாற்றிக் கொண்டால் அவை யாவும் மறைந்து போகும்.
0 comments
Post a Comment