Pages

Thursday, May 29, 2014

திருடாதே… பள்ளியில் திருடாதே!

திருடினால் கை வெட்டு என்பது இஸ்லாமிய குற்றவியல் சட்டம். இதை நபி (ஸல்) அவர்கள் விளக்கும் பொழுது என் மகள் பாத்திமா திருடினாலும் கையை வெட்டுவேன் என்று  சொன்னார்கள். பாத்திமா தனது பாசத்துக்கு உரிய மகள் என்பதால் கூட இரக்கம் காட்ட முடியாது என்பதையே நபியவர்கள் இதன்மூலம் தெளிவுபடுத்தினார்கள்.
இந்த அளவுக்கு இஸ்லாம் திருட்டு தொடர்பில் கடுமையான சட்டத்தை வகுத்துள்ளது. திருட்டை அடியோடு இல்லாது செய்வதே இதன் நோக்கமாகும்.
நாட்டில் தற்போது கொலை, கொள்ளை, விபச்சாரம் என பல குற்றச்செயல்கள் மலிந்துவிட்டன. அதனை தடுப்பதற்கு இறுக்கமான சட்டங்கள் அவசியமாகின்றன.
நாளாந்தம் நாடு முழுவதிலுமுள்ள பொலிஸ் நிலையங்களில் திருட்டுச் சம்பவங்கள் தொடர்பிலான நூற்றுக்கணக்கான முறைப்பாடுகள் பதிவு செய்யப்படுகின்றன. அந்தவகையில் கடந்த இரு வாரங்களுக்குள் நான்கு பள்ளிவாசல்களில் இடம்பெற்ற திருட்டுச்சம்பவங்கள் நமது கவனத்தை ஈர்த்துள்ளன.
குருநாகல் மல்லவபிடிய, காலி ஒசனகொட,  கண்டி மடவளை மற்றும் கண்டி தெஹியங்கை பேன்ற பகுதிகளில் உள்ள நான்கு பள்ளிவாசல்களிலிருந்தும் இலட்சக்கணக்கான ரூபாய்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன.
குறிப்பிட்ட அத்தனை சம்பவங்களும் இரவுப்பொழுதில் அதுவும் கடுமையான மழையுடன் கூடிய நேரத்திலேயே இடம்பெற்றுள்ளன. அதிலும் குறிப்பாக ஸகாத் நிதி மற்றும் பள்ளிவாசல் உண்டியல் என்பனவே திருடர்களின் இலக்காக இருந்துள்ளமை இங்கு அவதானிக்கத்தக்கதாகும்.
இரு வார காலப்பகுதிக்குள் வௌவ்வேறு தினங்களில் இடம்பெற்றுள்ள இந்நான்கு சம்பவங்களுக்கும் ஒரே குழுவினரால் மேற்கொள்ளப்பட்டவையா எனும் சந்தேகங்களும் தற்போது தோற்றம் பெற்றுள்ளன.

குருநாகல் மல்லவபிட்டி ஜும்ஆப் பள்ளிவாசல்

மேற்படி மூன்று பள்ளிவாசல் திருட்டுச் சம்பவங்களில் ஆகக்கூடிய தொகை பணம் குருநாகல் மல்லவபிட்டி ஜும்ஆப் பள்ளிவாசலில் கொள்ளையிடப்பட்டுள்ளது.
ஸகாத் நிதி பத்து இலட்சத்து நாற்பதாயிரம் ரூபா பணம் இங்கு கொள்ளையிடப்பட்டுள்ளதுடன் பள்ளிவாசல் உண்டியலும் உடைக்கப்பட்டுள்ளது. உண்டியலில் இருந்த பணத்தின் தொகை தொடர்பில் கணக்கிடமுடியாதுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இக்கொள்ளைச் சம்பவம் கடந்த 13 ஆம் திகதி வெள்ளிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் குருநாகல் பொலிஸில் முறையிடப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகள முன்னெடுக்கப் படுகின்றன.

மடவளை ஜாமிஉல் ஹைராத் ஜும்ஆப் பள்ளிவாசல்

மேற்படி சம்பவம் இடம் பெறுவதற்கு நான்கு தினங்களுக்கு முன்னர் 09.09 திங்கட்கிழமை அதிகாலை கண்டி மடவளை ஜாமிஉல் ஹைராத் ஜும்ஆப் பள்ளிவாசலிலும் திருட்டுச்சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
பள்ளிவாசலின் காரியாலயத்தின் உள்ளே நுழைந்த திருடன் உண்டியல் பணம் (மதிப்பிடப்பட்டிருக்கவில்லை), முஅத்தினுக்கு அன்பளிப்பாக கொடுப்பதற்கு வைக்கப்பட்டிருந்த 50 ஆயிரம் ரூபா பணம், பள்ளிவாசல் உபகரணங்கள் வாடகைக்காக விடப்பட்டு பெறப்பட்ட 28 ஆயிரம் ரூபா, ஜும்ஆ வசூல் 55 ஆயிரத்திற்கு மேற்பட்ட தொகை பணம் என்பவற்றை கொள்ளையிட்டுள்ளான். அத்தோடு ஆறு கடித உறைகளில் வைக்கப்பட்டிருந்த ஸகாத் நிதியும் கொள்ளையிடப்பட்டுள்ளது. இங்கு மொத்தமாக  சுமார் 6 இலட்சம் ரூபா வரை  திருடப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
களவாடப்பட்ட அறையில் வழமையாக ஒருவரும் தங்குவதில்லை. பள்ளிவாசலுக்கு அதிகாலையில் தஹஜ்ஜத் தொழுவதற்கு வந்த சிலர் பள்ளியின் ஜன்னல் உடைக்கப்பட்டிருப்பதை அவதானித்ததைத் தொடர்ந்தே திருட்டுச் சம்பவம் இடம்பெற்றமை தெரிய வந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பில வத்தேகம பொலிஸில் பள்ளிவாசல் நிருவாகத்தினரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

காலி ஒசனகொட பள்ளிவாசல்

இதேவேளை செப்டெம்பர் 8 ஆம் திகதி இரவு காலி ஒசனகொட பள்ளிவாசல் பிரதான நுழைவாயில் கதவுக்கு போடப்பட்டிருந்த பூட்டை உடைத்த திருடன் பள்ளிவாசலுக்குள் நுழைந்து பள்ளிவாசல் பேஷ் இமாம் அறையில் உறங்கிக் ருக்கும்போதே மிகவும் நுட்பமான முறையில் திருடிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவத்தின்போது பள்ளிவாசல் பேஷ் இமாம் தனக்கு மயக்கம் ஏற்பட ஏதும் செய்யப்பட்டதா அல்லது தான் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தேனா என்பது தெரியவில்லை என அவர் தெரிவித்தார்.
இப்பள்ளிவாசலில் இமாமின் பெறுமதியான கையடக்கத்தொலைபேசி, கைக்கடிகாரம், அவரிக் கடவுச்சீட்டு, ஆள்அடையாள அட்டை உள்ளிட்ட முக்கிய ஆவனங்கள் உட்பட பள்ளிவாசல் உண்டியலும் உடைக்கப்பட்டு (உள் இருந்த பணம் எவ்வளவு என்பது தெரியாது) திருடப்பட்டுள்ளன.
இச்சம்பவம் குறித்து காலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை காலி கந்தவத்தை அல்மீறா ஜும்ஆப்பள்ளிவாசலிலும் சிறிய அளவிலான திருட்டுச்சம்பவம் ஒன்று அண்மையில் இடம்பெற்றுள்ளதாக அப்பள்ளிவாசலின் முஅத்தின் தெரிவிக்கிறார்.

தெஹியங்க ஜும்ஆப் பள்ளி வாசல்

தெஹியங்க ஜும்ஆப் பள்ளி வாசலில் திருட்டுக்கும்பல் ஒன்று தமது கைவரிசையை காட்டியுள்ளனர்
கண்டி தெஹி­யங்கை முஹி­யித்தீன் ஜும்ஆ பள்­ளி­வா­சலில்  கடந்த 23.09.2013 திங்­கட்­கி­ழமை இரவு பள்­ளி­வாசல் அலு­வ­லக அறை உடைக்­கப்­பட்டு பன்­னி­ரண்­டா­யிரம் ரூபா ரொக்கப் பணம் கொள்­ளை­ய­டிக்­கப்பட்டுள்­ளது.
இக்­கொள்ளைச் சம்­பவம் நள்­ளி­ரவு ஒரு மணி­ய­ளவில் இடம்­பெற்­றுள்­ள­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. இக்­கொள்ளைச் சம்­ப­வத்தின் போது கொள்­ளை­யர்கள் முச்­சக்­க­ர­வண்­டியில் வந்து பள்­ளி­வாசல் அலு­வ­லக அறையின் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்து அலு­வ­லக அறை­யெங்கும் ஆவ­ணங்­களைத் தேடி­யி­ருப்­ப­தா­கவும் சந்­தே­கிக்­கப்­ப­டு­கின்­றது. இந்த அலு­வ­லக அறை­யெங்கும் கோவைகள் வீசிச் சித­றி­யி­ருந்­த­தா­கவும் தெரி­விக்­கப்­பட்­டது.
இதனால் இவர்கள் கோவை­களில் ஆவ­ணங்­க­ளையும் பெற்­றுக்­கொள்ளும் நோக்­கத்தில் இக்­கொள்ளைச் சம்­ப­வத்தில் ஈடு­பட்­டி­ருக்­கலாம் என்று  சந்­தேகம் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.
இக்கொள்ளைச் சம்பவம் தொடர்பாக பேராதனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு பள்ளிவாசல்களில் தொடர்ந்து திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்று வருவதானது மக்கள் மத்தியிலும் பள்ளிவாசல் நிர்வாகங்கள் மத்தியிலும் அச்சத்தைத் தோற்றுவித்துள்ளது.
நாட்டின் பல ஜும்ஆப் பள்ளிவாசல்கள் அதிக வருமானம் கொண்டவையாக விளங்குகின்றன. இதனை இலக்கு வைத்தே இவ்வாறான திருட்டுச் சம்பவங்கள் இடம்பெறுவது வெளிப்படையானது.
எனவே இது விடயத்தில் பள்ளிவாசல் நிர்வாகங்கள் உரிய கரிசனை செலுத்த வேண்டும். பள்ளிவாசல்களின் பாதுகாப்பை பலப்படுத்துவதுடன் பணத்தை வங்கிகளில் பாதுகாப்பாக வைப்புச் செய்வதன் மூலம் திருடர்களின் கைவரிசைகளிலிருந்து பாதுகாக்கவும் முடியும்.

0 comments

Post a Comment